மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1989-ம் ஆண்டு முதல் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை உள்ளிட்ட மிக முக்கியமான சவால்கள் உருவாகின்றன.

உலக மற்றும் இந்திய மக்கள் தொகை நிலவரம்

இந்தியாவைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சமீபத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளது.

விவரம் மக்கள் தொகை (தோராயமாக) குறிப்பு
உலக மக்கள் தொகை 760 கோடி
இந்திய மக்கள் தொகை 134.8 கோடி (2018 நிலவரம்) உலக மக்கள் தொகையில் 17.74%

பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஒவ்வொரு வினாடிக்கும் கணிசமான அளவில் குழந்தைகள் பிறக்கின்றன. சீனாவில் 1979-ம் ஆண்டு ‘ஒரு குழந்தை திட்டம்’ நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துவிட்டது.

நாடு ஒரு வினாடிக்கு பிறக்கும் குழந்தைகள்
இந்தியா 34
சீனா 11

மக்கள் தொகை பெருகப் பெருக உணவு, குடிநீர், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அரசு எதிர்கொள்ள நேரிடும். உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு நிலையை எட்டினாலும் கூட, மக்கள் தொகை பெருக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான இலக்கு அதிகமாகி கொண்டே போகும். உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுவோம்.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் முக்கிய சவால்கள்

ஐ.நா.வின் எச்சரிக்கையின்படி, மக்கள் தொகை பெருகி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பெரும் அவலத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். இது இந்தியாவுக்கும் பொருந்தும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன.

ஐ.நா அறிக்கையில், மக்கள் தொகை பெருக்கத்தால் நீடித்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகள் சில:

  • இந்தியா
  • சீனா
  • நைஜீரியா
  • பாகிஸ்தான்
  • காங்கோ
  • எத்தியோப்பியா
  • வங்காளதேசம்

பொதுவாக, மக்கள் தொகை அதிகரிப்பால் கீழ்வரும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன:

  • உணவுப் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பற்றாக்குறை
  • சுற்றுச்சூழல் மாசடைதல்
  • சமூக சீர்கேடுகள்
  • சுகாதாரப் பிரச்சினைகள்
  • வேலையின்மை
  • போக்குவரத்து நெரிசல்
  • இடப்பற்றாக்குறை

பிற பாதிப்புகள்:

மக்கள் தொகைப் பெருக்கத்தால் நாட்டில் பல்வேறு நோய்கள், பஞ்சம், பட்டினி, வறுமை, வேலையின்மை போன்றவை உருவாவது மட்டுமல்லாமல் இட நெருக்கடி, உணவுத் தட்டுப்பாடும் உண்டாகும். சாலைகளில், மக்களின் நெருக்கம் அதிகமானால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் அதிக அளவில் ஏற்படும். கல்வி நிலையங்களில் மாணவ-மாணவியரின் சேர்க்கையும் கடினமாகும். நம் நாட்டிற்கு அகதிகளாக வரும் அண்டை நாட்டு மக்களாலும் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

தீர்வுகள்:

மக்கள் தொகை பெருக்கத்தால் நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மக்களின் அறியாமையே ஆகும். இந்த அறியாமையை போக்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதனால் மக்கள் தொகை பெருக்கம் பற்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுவது மட்டுமின்றி குடும்பநலத் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியும். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கிற வீடுகளில் பெற்றோர்களால் அவர்களுக்கு நல்ல சத்தான உணவு, தரமான கல்வியை பெற்றுத் தர முடியும். அதுவே அதிக அளவில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் உணவுப் பிரச்சினையை தீர்க்கவே பெற்றோர் போராட வேண்டி வரும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதரின் கடமையாகும். அப்போதுதான் மக்கள் தொகைப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும், நாமும் மனமகிழ்வுடன் வாழலாம்.

Related posts

கூகுள் ஜெமினி AI: அதன் நன்மைகளும் தீமைகளும் – ஒரு விரிவான பார்வை

ஒரு வலுவான ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது எப்படி?

சங்கத் தமிழரின் அரசியல்