Vol. 3 No. 01 (2025): Special Issue August 2025
நூல் வெளியீட்டு உரை
தமிழ் மொழியின் ஆழமான வேர்களையும், இந்தியச் சிந்தனை மரபின் மகத்தான பங்களிப்பையும் ஒருசேர ஆராயும் உன்னதப் படைப்பாக,
'இந்தியச் சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்'
என்னும் இந்நூலை வெளியிடுவதில் தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் பெருமிதம் கொள்கிறது.
பழந்தமிழ்ச் சமூகத்தின் அறிவுசார் செழுமையையும், அதன் தொலைநோக்குச் சிந்தனைகளையும் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். அரசியல், அறிவியல், அறவியல், கலைகள், தொழில்நுட்பம், மேலாண்மை, இயற்கை, எதிர்காலவியல் போன்ற நவீன ஆய்வுத் தளங்களில் வேரூன்றிய இந்தியச் சிந்தனை மரபுகளை, தமிழ் இலக்கியத்தின் காலங்கடந்த படைப்புகளான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற செவ்வியல் நூல்களில் எவ்வாறு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை, வரலாற்றுப் பின்னணிகளுடன் இந்நூல் வெளிக்கொணர்கிறது.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தேனி தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் மிகச் சிறந்த படைப்புகள் ஒரு நூல் வடிவில் உலகத் தமிழ் அறிஞர்களின் கைகளில் தவழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆய்விதழ்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் (ISSN: 3049-0723), இத்தகைய ஆழமான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பைச் சிறப்பிதழாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. உயரிய ஆய்வுத் தரத்துடன், புதிய கோணங்களில் தமிழ் இலக்கியத்தை அணுகும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆய்வுலகிற்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் இந்நூல், தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைத்து நல்மனங்களுக்கும், குறிப்பாக புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, கல்லூரி நிர்வாகம், தமிழ்த்துறை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.